பொதுவாக, இதய நோய் என்பது பெரும்பாலும் ஆண்களைப் பாதிக்கும் நோய் என்ற ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. நெஞ்சுவலியால் அவதிப்படும் நடுத்தர வயது ஆண்களை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் போன்றவை இந்த தவறான எண்ணத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில், இதய மற்றும் இரத்த நாள நோய்கள் பெண்களையும் சம அளவில் பாதிக்கும் ஒரு மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினையாகும்.
பெண்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் இதய நோயும் ஒன்று. பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்ற எண்ணம் ஆபத்தானது. ஏனெனில், இது அறிகுறிகளை அடையாளம் காண்பதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவதிலும் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
இந்தத் தவறான கருத்து பரவலாக இருக்கக் காரணம் என்ன?
இந்தத் தவறான கருத்து உருவாக ஒரு முக்கிய காரணம், பெண்களின் ஹார்மோன்களில் ஒன்றான “ஈஸ்ட்ரோஜன்” இதய நோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கிறது என்ற நம்பிக்கையாகும். மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு முன்பு பெண்களுக்கு இயற்கையாகவே இதய நோய்க்கு எதிரான சில பாதுகாப்பு முறைகளை அவர்களின் உடல் வழங்கலாம். ஆனால் அதனால் பெண்களுக்கு இதய நோய் ஏற்படாது என்று அர்த்தமல்ல.
பெண்களுக்கு வயதாகும்போது, குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு நோய், உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் உடல் இயக்க பிரச்சினைகள் போன்ற காரணங்களால் இந்த அபாயம் மேலும் அதிகரிக்கலாம். எனவே, பெண்கள் தங்களுடைய இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
பெண்களுக்கு தனித்துவமான ஆபத்துக் காரணிகள் உள்ளன
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு இதய நோய்க்கான சில தனித்துவமான ஆபத்துக் காரணிகள் உண்டு.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற பிரச்சினைகள், எதிர்காலத்தில் பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
மேலும், இளம் வயதிலேயே மாதவிடாய் நிற்பது மற்றும் சில அழற்சி அல்லது உடல் தன்னைத்தானே தாக்கும் (ஆட்டோ-இம்யூன்) நோய்கள் போன்றவையும் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.
ஆகவே, ஆண்களின் அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெண்களின் இதய ஆரோக்கியத்தை மதிப்பிடாமல், பெண்களுக்கே உரிய ஆபத்துக் காரணிகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொள்வது அவசியம்.
பெண்களிடையே காணப்படும் இதய நோய் அறிகுறிகள்
பெண்களுக்கு ஏற்படும் இதய நோய் அறிகுறிகள் ஆண்களிடையே வழக்கமாக காணப்படும் அறிகுறிகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும் என்பதால் அது கவனிக்கப்படாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
நெஞ்சுவலி அல்லது நெஞ்சில் அழுத்தம் ஏற்படுதல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடையேயும் காணப்படும் பொதுவான மாரடைப்பு அறிகுறியாகும். கூடுதலாக பெண்களுக்கு மூச்சுத்திணறல், வழக்கத்திற்கு மாறான சோர்வு, குமட்டல், தலைச்சுற்றல், தாடை, கழுத்து, முதுகு அல்லது கைகளில் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். சில சமயம் இந்த அறிகுறிகள் அஜீரணம், மன அழுத்தம் அல்லது வழக்கமான சோர்வு உணர்வு என்று தவறாகக் கருதப்படலாம். இதனால் பெண்கள் மருத்துவ உதவியை நாடுவதில் தாமதம் ஏற்படலாம்.
எனவே, இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.
தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம்
பெண்களுக்கு ஏற்படும் பல இதய நோய் ஆபத்துக் காரணிகளைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்பது ஆறுதலான விஷயம்.
பெண்கள் சமச்சீரான உணவை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவை தீவிரமான இதய நோய்களாக மாறுவதைத் தடுக்க முடியும்.
குடும்பத்தில் இதய நோய் வரலாறு உள்ள பெண்களும், கர்ப்ப காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட பெண்களும், தங்களுக்கான இதய நோய் அபாயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
விழிப்புணர்வு மற்றும் மருத்துவத்தின் பங்கு
இதய நோய் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கும் என்ற தவறான கருத்தை மாற்றுவதற்கு பொதுமக்களிடையிலும் மருத்துவத் துறையிலும் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மற்ற முக்கிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு அளிக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை இதய ஆரோக்கியத்திற்கும் அளிக்க வேண்டும்.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும் அறிகுறிகள் மற்றும் ஆபத்துக் காரணிகளில் உள்ள வேறுபாடுகளை மருத்துவர்களும் புரிந்துகொண்டு, அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்களிடையே ஏற்படும் இதய நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சையை வழங்க முடியும்.
இறுதியாக சில வார்த்தைகள்
இதய நோய்கள் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கின்றன என்பது ஒரு ஆபத்தான, தவறான கருத்தாகும். இதய நோய் என்பது ஆண்களின் பிரச்சினை மட்டுமல்ல; அது அனைவருக்கும் பொதுவான ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையாகும்.
பெண்களும் தங்கள் இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதய நோயின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் போன்றவை பெண்களின் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.